அருள்மிகு கன்னிமாரம்மன் திருக்கோவில்,
அருள்மிகு கன்னிமாரம்மன் திருக்கோவில்,
மடத்துப்பாளையம்,
தாராபுரம் வட்டம்,
திருப்பூர் மாவட்டம்.
******************************
கோவில் ஸ்தல வரலாறு:-
"""""""""""""""""""""""""""
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் மடத்துப்பாளையம் கிராமத்தில் எட்டு தலை முறைக்கு முன் கவுண்டரய்யனும், அவர் தங்கை வள்ளி அம்மாளும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டனர். அவர்கள் ஒருவரை ஒருவர் பிரியாமல் இருக்க திருமணம் செய்யாமலே வாழ்ந்து வந்தார்கள்.இந்நிலையில் இறைவன் திருவிளையாடலால் வள்ளியம்மாள் பாம்பு கடித்து இறந்துவிட்டார்.
இந்த நிலையில் ஒருநாள், கவுண்டரய்யனின் கனவில் அம்மன் தோன்றி ஊர் நன்மைக்காகவும், உமது முன்னோர் வேண்டுதலாலும் அந்த ஈஸ்வரனின் கட்டளையின்படி நானே உன் தங்கையாக பிறந்து; இறக்க நேரிட்டது; யாமே ஊஞ்ச வனச்சோலையில் இச்சி மர நிழலில் ஏழு கன்னியராக அடக்கமாகி இருக்கிறோம். எனவே எனக்கு கோவில் அமைத்து வருடத்தில் ஒரு நாள் என்னை வழிபடுங்கள். இந்த ஊரையே செழிக்க வைக்கிறேன். இந்த ஊர் வளமான பூமியாக இருக்கும். இது என் பொறுப்பு” என்று கூறி மறைந்தாள் அன்னை பராசக்தி!
உடனே கவுண்டரய்யன் ஊஞ்சவனச் சோலைக்கு ஓடினார். அங்கே, இச்சி மரத்தடியில் இருந்த கல்லின் மீது, காராம்பசு ஒன்று பால் சொரிந்தபடி இருந்தது. இதைக் கண்டு மெய்சிலிர்த்த கவுண்டரய்யன்,
ஊருக்குள் ஓடி தகவலைச் சொன்னார். அதிசயித்து வியந்த ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து, அந்த இடத்தில் கோயில் எழுப்பி வழிபடத் துவங்கினர். ஏழு கன்னிமார்களுக்கும் சிலைகள் பிரதிஷ்டை செய்து கன்னிமாரம்மன் எனப் பெயரிட்டனர்.
ஊரின் நுழைவாயிலில் கிழக்கு எல்லையில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது பிரம்மாண்டமான ஆலயம். திறந்தவெளி
கோயிலுக்குள் அம்மனும் பரிவார தெய்வங்களும் இச்சிமர நிழலில் காட்சி தருகின்றனர். கோயில் வாசலில் பிரமாண்டமாக நிற்கின்றன பூதகணங்களும்
குதிரைகளும்.
கோயிலின் உள்ளே பொன்னர்,சங்கர் அவர்களின் தங்கையின் பூதகணங்களை தரிசிக்க முடிகிறது.
உள்ளே முக்கிய சந்நிதியில் பெரிய காண்டியம்மன், விநாயகர், கன்னிமார் அம்மன்கள், கருப்பண்ணசாமி ஆகியோர் காட்சி தருகின்றனர்.
கோயிலைச் சுற்றி நேர்த்திக்கடனாக வைக்கப்பட்ட மனிதர்கள் மற்றும்
பிராணிகளின் பொம்மைச் சிலைகள் நிறையவே உள்ளன.
படுகளம் போடுதல்
மாசி மாதம்– மகா சிவராத்திரி நாளில், கன்னிமார் அம்மனுக்கு பொங்கல் விழா நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு துவங்கும் விழா, இரண்டு தினங்கள் நடை பெருகிறது.திருவிழா அன்று மாலை 6 மணிக்கு, ஊருக்குள் இருக்கிற கோயில் வீட்டில்
இருந்து உத்சவமூர்த்தியை மேளதாளத்துடன் கோயிலுக்கு எடுத்து வருவார்கள்; பிறகு,
கோயில் வாசலில் ஊர்மக்கள் ஒன்றுகூடிப் பொங்கல் படையலிடுவர். நள்ளிரவு சுமார் 2 மணிக்கு, கன்னிமார் அம்மனின் அருமை பெருமைகளையும் அவளின் வரலாறையும்
பாட்டாகப் பாடுவார்கள். அப்போது, அங்கேயுள்ள ஆண்கள் பலரும் அருள் வந்து மயங்கி விழுவார்களாம்.
பிறகு அருகில் உள்ள கோவில் கிணற்றில் தீர்த்தம் எடுத்து வந்து, அம்மனிடம் வைத்து பூசைகள் செய்வர். இதையடுத்து, மயங்கிக் கிடக்கும் ஆண்களின் மீது தீர்த்தம் தெளிக்கப்படும் அதன் பின்னரே சுயநினைவிற்கு வருவர். இதனை
“படுகளம் போடுதல்” என்கின்றனர். இதையடுத்து கன்னிமாரம்மனுக்கும் பிற தெய்வங்களுக்கும்
சிறப்பு பூசைகள் நடத்தி, விழாவை நிறைவு செய்கின்றனர். இதன் பிறகு, அடுத்த
வருடத்தில்தான் கன்னிமாரம்மனுக்கு பூசைகள் நடைபெறுமாம்!
இந்த அம்மனை வணங்கி வழிபட்டால், அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதன் பலன் கிடைக்கும், அமோக விளைச்சல் பெருகும்; குழந்தைச் செல்வம் கிடைக்கும்; திருமணத் தடை அகலும் என்கின்றனர் பக்தர்கள்.
ஏழு கன்னியர்:-
1. பிரம்மி:-
பிரம்மி படைப்பின் கடவுளான பிரம்மா,சரஸ்வதியின் அம்சமாவார்.
2. மகேஸ்வரி :-
மகேஸ்வரி என்பவர் மகேஸ்வரானாகிய சிவபெருமான்,பார்வதி அம்சமாவார்.
3. கௌமாரி:-
கௌமாரி என்பவர் கௌமாரனாகிய முருகனின்,தெய்வானை அம்சமாவார்.
4. வைஷ்ணவி:-
வைஷ்ணவி என்பவர் விஷ்ணு என்று அழைக்கப்பெறும் திருமால்,லட்சுமி அம்சமாவார்.
5. வராகினி:-
வராகினி என்பவர் பூமாதேவி மற்றும் திருமாலின் வராக அம்சமாவார்.
6. இந்திராணி:-
இந்திராணி தேவலோகத்து அரசனான இந்திரனின்,இந்திராணி அம்சமாவார்.
7. சாமுண்டி:-
சாமுண்டி என்பவர் ருத்திரன்,பத்ரகாளி அம்சமாவார்.புராணத் தொடர்பு:-
=================
மகாபாரதம் அஞ்ஞானவாசத்தில் வரும் விராடபுரம் என்பது நமது தாராபுரம் பகுதியே ஆகும் என்று சில ஆன்மீக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்!
கீசகன் ஆண்ட ஊர் கீரனூர் ஆகும். பீமனால் கீசகன் கொல்லப்பட்ட இடம் தற்போதைய குண்டடம் பகுதியே ஆகும்.
அஞ்ஞானவாசம் என்பது தம்மை யாரும் அடையாளம் கண்டுகொள்ளாத வண்ணம் மாறுவேடம் பூண்டு மறைந்து வாழ்வதேயாகும். அந்த அஞ்ஞான வாசத்தின்போது பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலி ஆகியோர் தமது ஆயுதங்கள் மற்றும் ஆடை அணிகலன்களை இந்த கன்னிமாரம்மன்
அண்ணன்மார் கோவிலில் உள்ள வன்னிமரம் ஒன்றில் மறைத்து வைத்துவிட்டு அரண்மனை வேலையாட்கள் போன்று உருமாறி அப்போது இப்பகுதியை ஆண்ட விராட மன்னரிடம் வேலைக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது.
இப்போது இங்கே வன்னிமரம் இல்லை. பெரிய அளவில் இச்சிமரம் ஒன்று உள்ளது. (இன்றளவும் சில ஆயுதங்களும் ஆபரணங்களும் பூமிக்கடியில் புதையுண்டு கிடக்கின்றனவாம்!)
பாண்டவர்களின் சக்திவாய்ந்த ஆயுதங்களும் ஆபரணங்களும் பல நாட்கள் இங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்ததால் இன்றளவும் அதன் அதிதீத சக்திகள் இங்கு நிலைபெற்று பக்தர்களுக்கு அருள் ஆற்றலை வழங்கிக்கொண்டு இருப்பதாக நம்பப்படுகின்றது.
அக்காலத்தில் இங்கே பெரிய குளம் ஒன்று இருந்ததாகவும் அதில் பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலி ஆகியோர் நீராடியதாகவும் அம்மன் வழிபாடு செய்ததாகவும் கூறப்படுகின்றது!?!?
அதனால் இவ்வளவு புராண சிறப்புமிக்க இந்த கன்னிமாரம்மன் அண்ணன்மார் கோவிலுக்கு ஒரு முறை வந்தாலே போதும் பேய், பிசாசு, ஏவல்,பில்லி சூன்யம், பயம், வாழ்க்கையில் விரக்தி போன்ற அனைத்துத் தொல்லைகளும் சங்கடங்களும் நீங்கி வாழ்க்கை வளம்பெரும் என பக்தர்கள் கூறுகின்றனர்.
இவ்வளவு சிறப்புமிக்க அருள்மிகு கன்னிமாரம்மன் அண்ணன்மார் சுவாமியை வழிபட்டு வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற்று சீரும்சிறப்போடுவாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!
அடியேன்.....,
Ramasamy MD Acu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஓம் நமசிவாய